மண்ணோடு மரத்தை
வெட்டிச் சாய்த்தபின்
மண்ணுள் வேர்களின்
கண்ணீரை
யார் அறிவார்?
விண்ணோடு நீந்திவரும்
வண்ணமகள் வெண்ணிலவு
சொல்லாமல் தொலைகையில்
சோர்ந்துருகும் இரவுகளின்
சோகத்தை யார் அறிவார்?
கண்ணோடு மனம் வருடி
சிறுமலரில் ஒரு மலராய்
மெய்யுருகும் வேளைகளில்
பிஞ்சுக் கரங்களுள்
சிறைப்பட்டுச் சிறகடிக்கும்
பட்டாம் பூச்சியின்
படபடப்பை யார் அறிவார்?
பெண்ணோடு காமம்கொண்டு
பொன்மேனி புண்ணாக்கும்
காமுகனின் கரங்களுள்
கருகிப் போகும்
பூவையரின்
மனச்சிதறல் யார் அறிவார்?
தன்னோடு வெறுப்பெய்தி
தான் வாழப்பிடிக்காமல்
தற்கொலை புரிந்தபின்னும்
ஊர் வாயில் அகப்பட்டு
ஊகங்களுள் சிறைப்பட்டு
வெறும் காற்றாகிப்
படபடக்கும் - அந்த
உயிரின் வலி யார் அறிவார்?